ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி , ராஷ்டீரியா ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் போன்ற பெரிய மாநில கட்சிகளும் ஆதரவளித்தன. தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின.
அதன் அடிப்படையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து தனித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தி வருகின்றனர். இது தவிர தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் CPM, CPI ஆதரவு விவசாய சங்கங்களோடும், இதர விவசாய சங்கங்கள் மற்றும் கட்சிகளோடும் இணைந்து பங்கேற்று மஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே மேலப்பாகையில் கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் திரளான மஜகவினர் மறியலில் பங்கேற்றனர். இதில் CPM, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினரும் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் ECR சாலையில் திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மருத்துவ காரணங்களுக்கான வாகனங்களுக்கு மட்டும் வழி விடப்பட்டது.
இன்று நடைபெற்ற மறியலில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரியுடன் தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல், கீழையூர் ஒன்றிய செயலாளர் ஜியாவுல் ஹக், மாவட்ட விவசாய அணி செயலாளர் முகம்மது ஜெக்கரியா, திருப்பூண்டி கிளை செயலாளர் ஹாஜா மொய்னுதீன் உள்ளிட்ட திரளான மஜகவினரும் பங்கேற்றனர்.

