அதிரையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது கட்டாயமில்லை என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் பணியாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களின் அச்சயுணர்வு காரணமாக முதலில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் முகாமுக்கு அனுமதி மறுத்த சம்சுல் இஸ்லாம் சங்கம், பின்னர் சங்க வளாகத்தில் முகாம் நடத்த அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்த பதிவுகள் இணையத்தில் வெளியான நிலையில், விளக்கம் அளித்திருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கம், எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் அடி பணிய வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாமை சங்க வளாகத்தில் நடத்த அதிகாரிகள் விரும்பியபோது அதற்கு தாங்கள் ஒத்துக்கொள்ள வில்லை என கூறிய நிர்வாகிகள், அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்திய சமயத்திலும் தங்கள் தரப்பிலிருந்து பிடி கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் செயற்குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் முகாம் நடத்த மட்டும் சங்க வளாகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.
அதிரை வரலாற்றிலேயே வார்டு மறுவரையரை குளறுபடியை கண்டித்து மக்களை திரட்டி முதன்முதலில் போராட்டம் நடத்திய ஒரே சங்கம் சம்சுல் இஸ்லாம் சங்கம் என்பதை சுட்டிக் காட்டிய நிர்வாகிகள், எந்த அரசியல் அழுத்ததிற்கும் பணிய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் எத்தகைய விமர்சனங்கள், தடைகள் வந்தாலும் முகல்லா மக்களுக்கான சேவையை சம்சுல் இஸ்லாம் சங்கம் தொடர்ந்து செய்யும் என அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் 14ம் தேதி அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியான “சுயமரியாதையை இழந்ததா அதிரை ஜமாஅத்?” என்கிற பதிவு திரும்பப்பெற படுகிறது.