அதிரையில் அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் படுமோசமாக இருக்கிறது. வறட்சியான காற்றுடன் அனல் பறக்கும் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி ஆடு, மாடுகளை கடித்து பதம்பார்த்து வந்த வெறிநாய்கள் தற்போது தெருக்களில் நடமாடும் சிறுவர்களை கடித்து குதற ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக சி.எம்.பி லைனில் 7 வயது சிறுவனை வெறிப்பிடித்த நாய் ஒன்று கடித்து குதறியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிரை நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சொத்துவரி வசூலிக்க மும்முரம் காட்டும் நகராட்சி நிர்வாகம், அதே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க துளியளவும் அக்கறை காட்டாதது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.