திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற பல திட்டங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் அரசின் சேவைகள், விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை நாளை 18ம் தேதி திங்கட்கிழமை கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை 18/12/2023 திங்கட்கிழமை ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரே உள்ள செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு வார்டுகள் வாரியாக முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் துறைகள் மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி வார்டுகளுக்கான முகாம் தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.