அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாதி. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு முஹம்மது ஈஸா என்ற மகன் உள்ளார். 14 வயதான முஹம்மது ஈஷாவிற்கு பார்வைத்திறன் குறைபாடு, நடக்க முடியாத நிலை என மாற்றுத்திறனாளியாக இருக்கிறார்.
இந்நிலையில் அல்மனார் துபாய் சென்டர் சார்பில் தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய துபாய் அல் நஹ்த பாண்ட் பார்க் எதிரே உள்ள அல் ஜரூனி பள்ளியில் தமிழ் பயான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பயான் நிகழ்வை அதிரையை சேர்ந்த அப்துல் ஹாதியின் மகன் முஹம்மது ஈஸா தன்னுடைய அழகிய குரலில் இனிமையாக குர்ஆனுடைய வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். அப்போது அங்கிருந்த முஸ்லிம்கள் முஹம்மது ஈஸாவின் குர்ஆன் ஓதும் ஆற்றலை வெகுவாக பாராட்டி, அச்சிறுவனுக்கு துஆ செய்தனர்.
மேலும் பல மணி நேரங்கள் குர்ஆனை பார்க்காமல் ஓதிய உலகின் முதல் மாற்றுத்திறனாளி சிறுவன் என்ற சாதனையையும் அதிரையைச் சேர்ந்த முஹம்மது ஈஸா, ஐன்ஸ்டைன் உலக சாதனை அமைப்பால் கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் முஹம்மது ஈஸாவிற்கு அவரின் சகோதரிகளான புகழ்பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் கிளினிக்கள் சைக்காலஜி படித்து வரும் சுமையா மற்றும் அமீரகத்தின் மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பட்டம் படித்து வரும் ஆயிஷா ஆகியோர் சிறுவன் குர்ஆன் கற்க உற்ற உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
கடல்கடந்து சென்றும் அதிரைக்கு பெருமையை தேடித்தந்து கொண்டிருக்கும் சிறுவன் முஹம்மது ஈஸா மற்றும் அவரை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவரின் தாய், தந்தை மற்றும் சிறுவனின் சகோதரிகள் சுமையா, ஆயிஷா ஆகியோருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் வாழ்த்துக்களும் துஆக்களும்…