தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும் கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிரையில் உள்ள பிற அமைப்புகளின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தூர்வாரப்பட்ட கடற்கரைத்தெரு வாழைக்குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனருகே மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதிரை கடற்கரை மேம்பாட்டு பணியை ஆய்வு செய்யவும் நாளை 10/03/2024 ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வருகை தர உள்ளார்.
அவருடன் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, கைஃபா அமைப்பின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளருமான கார்த்திகேயன் வேல்சாமி, கைஃபா செயலாளர் பிரபாகரன், அதிராம்பட்டினம் நகரமன்ற தலைவர் M.M.S. தாஹிரா அப்துல் கரீம், துணைத்தலைவர் இராம. குணசேகரன், PST Forum மாவட்ட தலைவர் Ln. T.P.K. ராஜேந்திரன், லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் Ln. S. முஹம்மது ரபீக், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் PGT. செய்யது முஹம்மது, கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அதிராம்பட்டினம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர், கிராம பஞ்சாயத்தார்கள், ஜமாஅத் நிர்வாகிகள் என அனைவருக்கும் கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அதிரை அரிமா சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.