அதிரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைத்தெரு S.M.A. அன்வர் பந்தல் அமைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த கீற்றுகள் , மரங்கள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
அந்த தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் அதிரையில் மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அதிரை செட்டித்தோப்பில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடுமையான வெயிலின் காரணமாக வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு அது வீடு முழுவதும் பரவி , ஒரு வீடு முழுவதும் எரிந்தும் மற்றொரு வீடு பாதி எரிந்த நிலையிலும் உள்ளன. அப்பகுதி மக்கள் தீ மேலும் பரவாத வகையில் தீயை அணைத்தனர்.
அதிரையில் சமீப காலமாக இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டால் அத்தீயை அணைக்க பட்டுக்கோட்டை , பேராவூரணி போன்ற ஊர்களில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. ஆனால் பட்டுக்கோட்டை , பேராவூரணி ஆகிய நகரங்கள் அதிரையில் இருந்து சற்று தொலைவில் இருப்பதால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பே தீ விபத்தால் பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டுவிடுகிறது.
எனவே பொருட்சேதத்தை தவிர்க்கவும் , தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து தீயை அணைக்கவும் அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ஊர்மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.