உலக நாட்டாமை அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான சமீபத்திய வர்த்தக பனிப்போர் எல்லோரும் அறிந்ததே. இதில் பிரதான இடம் வகிப்பது 5ஜி அரசியல் என்பது தனி கதை. இவைகளை பற்றி பேச வேண்டும் என்றால் 21 நாட்கள் போதுமானதாக இருக்காது. சரி, தற்போது நாம் லோக்கல் பிரச்சனைக்கு வருவோம். சீனாவில் பிறந்து ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளை பதம்பார்த்துவிட்டு இந்தியாவுக்குள் வந்திருக்கும் அலையாவிருந்தாளியான கொரோனா வைரஸால் நாடே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த இதைவிட்டால் வேறொரு வழியும் இல்லை. ஏனெனில் கொரோனாவின் தாய் வீடாக கருதப்படும் யூஹான் நகர், ஏறக்குறைய 2 மாத ஊரடங்குக்கு பிறகே கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அங்கு ஊரடங்கு இன்னும் முழுவதுமாக நீக்கப்படவில்லை. இந்த சூழலில் தான் நம் நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்கை நாம் எப்படி கையாள போகிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். உலக நடப்புகளை அவ்வப்போது அறிந்துவரும் சூழலில் எதிர்கால சந்ததிகளை கவனத்தில் கொண்டு உரிய செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுவதே சிறந்ததாக இருக்கும். அதில் முதலாவதாக வெளியில் சுற்றுவதை தவிர்த்து வீட்டிலேயே நாமும் நம் குடும்பமும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக தினச்சரி செலவினத்தில் தேவையற்ற செலவுகளை கைவிடுவது அவசியமாகும். பதுக்கல் இல்லாமல் அனைத்தும் அனைவருக்கும் நியாயமாக கிடைப்பதை வியாபாரம் செய்யும் ஒவ்வொருவரும் உறுதி செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களின் சுமை ஓரளவுக்கு குறையும்.
இவ்வாறு பொறுப்புணர்ந்து செயல்பட்டால் யூஹான் நகரைபோல் கொரோனாவை வீழ்த்த 63 நாட்கள் நமக்கு தேவையில்லை. 14 நாட்களே போதும்.