Home » ஆல் பாஸ் உத்தரவை ஏற்க முடியாது – தேர்வு நடத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆல் பாஸ் உத்தரவை ஏற்க முடியாது – தேர்வு நடத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 comment

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பாடாய்படுத்தியதால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரியில் படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ”தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து அதை தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் பல்கலைக்கழக மானியக் குழு(யூஜிசி) விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், ”கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டது. தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் ‘ஆல் பாஸ்’ என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அரியர் மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி சிறந்த முடிவினை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்? எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்தும் தமிழக அரசு முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter