113 கிலோமீட்டர் வேகத்தை எட்டி பிடிப்பதை சவாலான ஒன்றாக நான் எண்ணியதில்லை. ஈசிஆர் சாலையில் எனக்கு சர்வசாதாரணம் இது. 2014க்கு முன்பு வரை நான் இப்படிதான் இருந்தேன். சில சமயம் சாலையில் சிதறி கிடந்த மனித மூளையை கூட கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவி இருக்கிறேன். விபத்து நடந்த சாலையை படமாக வரைந்து கற்பனையை சிறகடித்து பறக்க வைத்து செய்தியாக்குவது எனக்கான பாணி.
அவ்வாறே ஒருநாள் தொடர்புக்கொண்ட நண்பர் ராஜமாடம் அருகே ஆக்சிடெண்ட் உடனே கிளம்பி வா! என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார். முன்பு கூறியபடியே வேகமெடுத்தது எனது பைக். நிகழ்விடத்தை அடைந்ததும் சங்கதி புரிந்தது. விபத்திற்கு அதிவேகமே மூலதனம். விளைவு பைக்கில் வந்த இருவரின் மூளைகளும் சதைகளும் சாலையில் சிதறி கிடந்தன. அதுவரை அதிவேகத்தை பற்றி எண்ணி பார்க்க மறந்திருந்த என் மனம் அபூர்வமாக சிந்திக்க துவங்கியது.
நான் எப்படியும் மரணித்துவிடுவேன், ஆனால் என் மீது நேசம் கொண்டோர் என்னை இப்படி கண்டால் அவர்களின் மனம் எந்த அளவிற்கு பாதிப்படையும் என்பது தான் அந்த சிந்தனை. நிகழ்விடத்திலேயே ஏகமனதாக அவசர தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினேன். அதன்படி தற்சமயம் வரை 50 கிலோமீட்டர் வேகத்தை தாண்டுவதில்லை. ஒருமுறை மட்டும் என் சகோதரருக்காக அந்த தீர்மானத்தை முடக்கினேன். மற்றபடி அது நிரந்தர சட்டமே.
4 ஆண்டுகள் அதிவேகமாக ஓடிவிட்டது. அந்த இருவரின் மரணம் என்னமோ நேற்று தான் நடந்தது போல் தோன்றுகிறது.
-சாலிஹ்